சவூதியில் 18 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த தமிழர் மீட்பு: விரைவில் ஊர் திரும்புகிறார்
துபாய்: கடந்த 18 ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் கொத்தடிமையாக இருந்த தமிழர் மீட்கப்பட்டார். அவர் விரைவில் சொந்த ஊர் திரும்பவிருக்கிறார்.
பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு பகுதியைச் சேர்ந்தவர் பி.பெரியசாமி (45). அவர் திருமணம் முடிந்து ஓராண்டான நிலையில் தனது 27வயதில் கடந்த 1994ம் ஆண்டு வேலைக்காக சவூதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு அவர் ஹெயில் என்ற பகுதியில் ஒட்டகம் மேய்த்து வந்தார். அவருக்கு அந்த வேலையை வாங்கிக் கொடுத்தவர் அதாவது ஸ்பான்சர் அவருக்கு சம்பளத்தை கொடுக்காமல், அவரை சொந்த ஊருக்கும் செல்ல அனுமதிக்காமல் இருந்துள்ளார்.
வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் சவூதிக்கு வந்து இப்படி சிக்கிக் கொண்டோமே என்று மனமுடைந்த பெரியசாமி வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு முயன்றார். இருப்பினும் தனக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக அவர் கடந்த 18 ஆண்டுகளாக குரல் கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் படும் துயரத்தைப் பற்றி அறிந்த சவூதி குடிமகன் ஒருவர் இது குறித்து போலீஸ் மற்றும் ஆளுநரிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து பெரியசாமியின் ஸ்பான்சர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் 18 ஆண்டுகளாக சி்க்கித் தவித்த பெரியசாமியை மீட்டு அல் ஷாம்லி போலீசாரின் பராமரிப்பில் வைக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெரியசாமியின் சம்பளபாக்கியை மொத்தமாக கொடுப்பதோடு அவருக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்குமாறு அநத ஸ்பான்சருக்கு உத்தரவிட்டது. பெரியசாமியின் சம்பளபாக்கியை பெற்றுத்தருமாறும், அவரை விரைவில் ஊருக்கு அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளை செய்யுமாறும் அல் ஷாம்லி போலீசாருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பெரியசாமியிடம் பயணம் செய்யத் தேவையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அங்குள்ள இந்திய தூதரகம் அவருக்கு அவுட்பாஸ் கொடுத்துள்ளது. இதையடுத்து அவர் விரைவில் சொந்த ஊருக்கு திரும்பவிருக்கிறார். இதற்கிடையே அவரது குடும்பத்தாரை கண்டுபிடிக்க தூதரகம் முயற்சி செய்து வருகிறது.