தமிழக கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நெல்லை: தமிழ்நாடு முழுவதும் நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கடற்கரை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உருவாகும் சுனாமி அலைகள் சென்னையை மாலை நான்கு மணிக்கு தாக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் மிகவும் குறைவாக 0.2 மீட்டர் அளவிற்கு சுனாமி அலைகள் மட்டுமே எழும்பும் என்று கூறப்படுகிறது.
சுனாமி எச்சரிக்கையை அடுத்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து கடலோர மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த நூறு ஆண்டுகளில் ஏற்பட்ட 8 வது பெரிய நிலநடுக்கம் என்பதால் சுனாமியின் தாக்குதல் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. உயிரிழப்பு எதுவும் ஏற்படக்கூடாது என்பதால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் எச்சரிக்கை
ராமநாதபுரத்தில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு கடலோர பகுதிகளில் பாதிப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர், வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
நாகர்கோவில் ஆலோசனை
நாகர்கோவில் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடல் அலைகள் சிறிதளவு உயர்ந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டடங்கள் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் வசிப்பவர்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் சுனாமி உணரப்படவில்லை என்றாலும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. இதேபோல் கூடங்குளம் அணுமின்நிலையப்பகுதிகளிலும் தயார் நிலையில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.