கடத்தப்பட்ட 2வது இத்தாலியரையும் விடுவித்தனர் மாவோயிஸ்ட்கள்: எம்.எல்.ஏ. கதி என்ன?
புவனேஸ்வர்: மாவோயிஸ்ட்டுகளால் கடத்தி பிணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்த இத்தாலிய நாட்டவரான போசுஸ்கோ பாவோலோ இன்று கந்தமால் மாவட்டத்தில் விடுதலை செய்யப்பட்டார். இதன் மூலம் கடத்தப்பட்ட இரண்டு இத்தாலியர்களும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
ஒடிசா மாநிலத்திற்கு சுற்றுலா வந்திருந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிளாடியோ கொலாஞ்செலோ (61), போசுஸ்கோ பவோலோ(54) ஆகிய 2 பேரை கந்தமால் மாவட்ட வனப்பகுதியில் வைத்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கடந்த மாதம் 14ம் தேதி கடத்திச் சென்றனர். இதில் கொலாஞ்செலோ மட்டும் கடந்த 25ம் தேதி விடுவிக்கப்பட்டார்.
கஞ்சம் மற்றும் கந்தமால் மாவட்டங்களின் எல்லையில் பெயர் தெரியாத இடத்தில் மாவோயிஸ்ட்டுகள் கொலாஞ்செலோவை பத்திரிக்கையாளர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் இன்று பவோலோவும் விடுவிக்கப்பட்டுள்ளார். கந்தமால் மாவட்டத்தில் ரைகியா என்ற இடத்திற்கு அருகே அரசுக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே மத்தியஸ்தராக இருந்த தண்டபானி மொஹந்தியிடம் அவரை ஒப்படைத்தனர்.
இது குறித்து மொஹந்தி கூறுகையில்,
மாவோயிஸ்ட்டுகள் பவோலோவை என்னிடம் ஒப்படைத்தபோது ஒடியா தொலைக்காட்சி நிருபர் ஒருவரும் என்னுடன் இருந்தார். பவோலோவை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவிருக்கிறேன் என்றார்.
முதலில் கொலாஞ்செலோவை விடுவித்த மாவோயிஸ்ட்டுகள் பவோலோவை விடுவிக்க வேண்டும் என்றால் அரசு தங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். அவர்கள் கூறியவாரே சிறையில் உள்ள 5 பேரை விடுவிக்க ஒடிசா அரசு ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் 12 நிபந்தனைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க அரசு சம்மதித்துள்ளது. இதையடுத்து தான் பவோலோ விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் கடந்த மாதம் 24ம் தேதி கோராபுட் மாவட்டம் தோயாபுட் பகுதியில் வைத்து கடத்தப்பட்ட லஷ்மிபூர் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா(37) (பிஜு ஜனதா தளம்) இன்னும் மாவோயிஸ்ட்டுகள் பிடியில் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.