காபூலில் தலிபான்கள் வெறித் தாக்குதல்-16 பேர் பலி-இந்தியர்கள் பத்திரம்!
காபூலின் பல இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. நாடாளுமன்றம் ராக்கெட் குண்டுகள் வீசித் தாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்திருக்கும் பகுதியை இலக்கு வைத்து தீவிரவாதிகள் இத்தாக்குதலை பலமுனைகளிலிருந்தும் மேற்கொண்டனர். ஜெர்மன் தூதரகம் பற்றி எரிந்தது.
நாடாளுமன்ற கட்டிடம் மீது ராக்கெட்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிபர் மாளிகை அருகே உள்ள ஸ்டார் ஹோட்டல் வளாகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தலைநகர் காபூலை தீவிரவாதிகள் கைப்பற்றிவிடாதபடி ஆப்கன் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இன்று காலைதான் ஆப்கன் எல்லையில் உள்ள பாகிஸ்தான் சிறையில் இருந்து தலிபான்கள் அதிரடித் தாக்குதலை நடத்தி 400-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்துச் சென்ற நிலையில் ஆப்கன் தலைநகரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது திட்டமிட்ட ஒன்றாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்த தீவிரவாதத் தாக்குதலால் காபூலில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
தலிபான்கள் பொறுப்பேற்பு
தாக்குதலுக்கு நாங்களே காரணம் என்று தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். இதுகுறித்து அவர்களின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறுகையில், எங்களது தற்கொலைப் படையினர் நேட்டோ படையின் தலைமை அலுவலகத்தைத் தாக்கியுள்ளனர். நாடாளுமன்றத்தைத் தாக்கியுள்ளனர். பல தூதரக அலுவலகங்களையும் வெற்றிகரமாக தாக்கியுள்ளனர். இது தொடக்கமே. மேலும் பல தாக்குதல்களை எதிர்பாருங்கள் என்று கூறியுள்ளார்.
16 பேர் பலி?
தலிபான்களின் இந்த அதிரடித் தாக்குதலில் சிக்கி 16 பேர் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் 2 போலீஸார் கொல்லப்பட்டதை காவல்துறை தரப்பில் உறுதி செய்துள்ளனர். உயிர்ப்பலி அதிகம் இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
திட்டமிட்ட தாக்குதல்
மிக மிக தெளிவாக திட்டமிட்ட தாக்குதல் இது என்று பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர். சகல ஏற்பாடுகளையும் செய்து விட்டே இந்தத் தாக்குதல்களை தலிபான்கள் மேற்கொண்டுள்ளனர்.
அவர்களின் முக்கியக் குறி மேற்கத்திய நாடுகளின் தூதரகங்களும், நாடாளுமன்றமும்தான்.
ஜலாலாபாத் சாலையில் உள்ள ராணுவ அகாடமி வளாகத்திலும் தலிபான்கள் குண்டு வீசித் தாக்கியுள்ளனர். காபூலில் உள்ள ஒரு ஹோட்டலை அவர்கள் கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல போலே சர்கி என்ற பகுதியிலும் அவர்கள் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.
இந்தியர்கள் பத்திரம்
இதற்கிடையே காபூலில் வசித்து வரும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.