சங்கரராமன் மனைவி, மகனிடம் மீண்டும் விசாரிக்க எங்களுக்கு ஆட்சேபணையில்லை-தமிழக அரசு
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த வாரம் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
இந் நிலையில் நீதிமன்றத்துக்கு வந்த சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த சர்மா ஆகியோர் தங்களுக்கு கொலை மிரட்டல் இருந்ததால் பயந்து போய் பிறழ் சாட்சியம் அளித்ததாகவும், எனவே மீண்டும் தங்களிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி நீதிபதி முருகனிடம் மனு அளித்தனர்.
இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து இன்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், சங்கரராமன் கொலை வழக்கில் அவரது மனைவி, மகனிடம் மீண்டும் விசாரணை நடத்த எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
பத்மாவின் மனுவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்களில் சுந்தரேச அய்யர், அப்பு, கதிரவன் ஆகியோர் எதிர் மனு தாக்கல் செய்தனர். ஆனால் மற்றவர்கள் எதிர் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் நீதிபதி முருகன் மீதம் உள்ள 21 பேரும் நாளைக்குள் எதிர் மனு தாக்கல் செய்யலாம் என்றும், இதன்பிறகு நாளையே விசாரணை தொடங்கும் என்றும் அறிவித்தார்.
இதற்கிடையே சங்கரராமன் மனைவிக்கு பாதுகாப்பு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு எஸ்.ஐ. தலைமையில் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதி முருகன் தனது உத்தரவில் கூறியுள்ளார்.