அரசியலில் இதெல்லாம் சாதாராணமப்பா... டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவு குறித்து மன்மோகன்!
டெல்லியை மூன்றாகப் பிரித்து, வடக்கு, கிழக்கு, தெற்கு என மூன்று மாநகராட்சிகளாக உருவாக்கி அதற்கு முதல் தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. வடக்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லியில் பாஜக பெரும்பான்மை பலம் பெற்று விட்டது. தெற்கு டெல்லியில் அக்கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
104 வார்டுகளைக் கொண்ட வடக்கு டெல்லியில், பாஜகவுக்கு 59 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸுக்கு 29 இடங்களே கிடைத்தன.
தெற்கு டெல்லியில் 104 வார்டுகளில் பாஜக 44 இடங்களைப் பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு இது 9 இடங்கள் குறைவாகும். காங்கிரஸ் கட்சிக்கு 30 இடங்கள் கிடைத்ன. சுயேச்சைகள் 14 பேர் வென்றுள்ளனர். இவர்களின் ஆதரவைப் பெற பாஜக முயற்சித்து வருகிறது.
கிழக்கு டெல்லியில்தான் காங்கிரஸுக்குப் பெரும் தோல்வி கிடைத்துள்ளது. 64 வார்டுகளைக் கொண்ட இந்த மாநகராட்சியில் பாஜகவுக்கு 35 இடங்கள் கிடைத்துள்ளன.
தேர்தல் தோல்வி காரணமாக காங்கிரஸ் வட்டாரம் பெரும் சோகத்தில் உள்ளது. இருப்பினும் பிரதமர் மன்மோகன் சிங் வெற்றி தோல்வி வீரனுக்கு சகஜம் என்ற கணக்கில் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தேர்தலில் வெற்றி-தோல்வி என்பது வழக்கமான ஒன்றுதான் என்றும், அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இது உள்ளாட்சி தேர்தல்தான். எனவே இதில் உள்ளூர் பிரச்சினைகள், அதற்கு தீர்வு காண பாடுபடுபவர்கள் போன்ற அம்சங்கள் முக்கியத்துவம் பெறும் என்றார் அவர்.