சங்கரராமன் மனைவி-மகனிடம் மறு விசாரணை கூடாது: ஜெயேந்திரர்
வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை முடிவடைந்து தற்போது வழக்கறிஞர்கள் வாதம் நடைபெற்று வருகிறது.
இந் நிலையில் கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த் சர்மா ஆகியோர் தங்களிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதி முருகனிடம் கொடுத்தனர்.
அந்த மனுவில் தங்களை சிலர் மிரட்டியதால் சாட்சியத்தை மாற்றி அளித்தோம். எனவே தங்களிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் கூறி இருந்தனர்.
இந்த மனுவுக்கு எதிராக, குற்றம் சாட்டப்பட்டவர்களில் சுந்தரேச அய்யர், அப்பு, கதிரவன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், மறு விசாரணை நடத்த ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.
அதே போல சங்கரராமன் கொலை வழக்கு மீது மறு விசாரணை நடத்தக்கூடாது என்று ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோரும் எதிர்மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
எங்களுக்கு ஆட்சேபணையில்லை-தமிழக அரசு:
சங்கரராமனின் மனைவி, மகனிடம் மீண்டும் விசாரிக்க எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.