பிரபல முதலீட்டாளர் வாரன் பஃப்பட்டுக்கு புரோஸ்டிரேட் கேன்சர்
பெர்க்ஷைர் ஹாத்தவே குழுமத்தின் தலைவர் வாரன் பஃப்பட் (81). உலகின் மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர் என்ற பெருமைக்குரியவர். 2008ம் ஆண்டு உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இத்தைப் பிடித்தவர். 2011 நிலவரப்படி இவர் 3வது இடத்தில் இருந்து வருகிறார்.
தனக்கு புற்றுநோய் தாக்கியுள்ளதாக தற்போது வாரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது நிறுவன பங்குதாரர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில்,
எனக்கு புரோஸ்டேட் கேன்சர் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது. ஜூலை மாத்த்தில் இருந்து தொடர்ந்து 2 மாதங்களுக்கு தினமும் ரேடியேஷன் சிகிச்சை அளிக்கவிருக்கிறார்கள்.
இதில் நல்ல செய்தி என்னவென்றால் எனக்கு வந்திருக்கும் கேன்சரால் எனது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனக்கு சிஏடி ஸ்கேன், எம்ஆர்ஐ மற்றும் எலும்பு ஸ்கேன் உள்பட பல மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டது. அதன் மூலம் எனது உடம்பில் வேறு எந்த பகுதியிலும் கேன்சர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
நான் எப்பொழுதும் போல் தான் உணர்கிறேன். நான் 100 சதவீதம் திடமாக உள்ளேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தனக்குப் பிறகு தனது இடத்திற்கு ஒரு நபரை தேர்வு செய்துவிட்டதாக அவர் அறிவித்திருந்தார். ஆனால் அந்த நபர் யார் என்று தெரிவிக்கவில்லை. அவரது நிறுவனத்தில் பணி புரியும் இந்திய வமசாவளியைச் சேர்ந்த அஜித் ஜெயின் அவரது சாம்ராஜ்யத்தை ஆளக்கூடும் என்று கருதப்படுபவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.