ராணுவ டிரக் ஊழல்: 2 முன்னாள் ராணுவ அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ ரெய்ட்
டெல்லி: ராணுவத்திற்கு தத்ரா டிரக்குகள் வாங்கியதில் செய்யப்பட்ட ஊழல் தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரிகள் 2 பேரின் வீடுகளில் நேற்று சிபிஐ அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
பொதுத்துறை நிறுவனமாக பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்(பிஇஎம்எல்) மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த வெக்டரா நிறுவனம் தத்ரா டிரக்குகளை இந்திய ராணுவத்திற்கு சப்ளை செய்தது. இந்த டிரக்குகள் வாங்குவதில் தனக்கு ரூ.14 கோடி லஞ்சம் தர சிலர் முன்வந்ததாக ராணுவ தளவதி வி.கே. சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இதையடு்தது இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தத்ரா டிரக் ஊழல் தொடர்பாக டெல்லியில் உள்ள ஓய்வு பெற்ற பிரிகேடியர் பி.சி. தாஸ் மற்றும் நொய்டாவில் உள்ள ஓய்வு பெற்ற கர்னல் அனில் தத்தா ஆகியோரின் வீடுகளில் நேற்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் இந்த ஊழல் தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.மேலும் வெக்ட்ரா நிறுவன ஊழியர் அனில் மன்சாரமணியின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முன்னதாக நேற்று முன்தினம் பிஇஎம்எல் நிறுவனத்தின் முன்னாள் டைரக்டர் வி. மோகன், தற்போதைய தலைவர் வி.ஆர்.எஸ். நடராஜன், வெக்ட்ரா குழும தலைவர் ரவிந்தர் ரிஷி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அப்போது ரவிந்தர் ரிஷி தான் அந்த 2 ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் பெயர்களை தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு தான் முன்னாள் ராணுவ அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடந்தது.
செக் குடியரசைச் சேர்ந்த தத்ரா நிறுவனம் இங்கிலாந்தைச் சேர்ந்த வெக்டரா நிறுவனத்திற்கு சொந்தமானது. வெக்டரா பிஇஎம்எல் மூலம் ராணுவத்திற்கு டிரக் பாகங்களை சப்ளை செய்தது. பிஇஎம்எல் பாகங்களை ஒருங்கிணைத்து டிரக் செய்து அதை ராணுவத்திற்கு வழங்கியது.
கடந்த 1986ம் ஆண்டில் இருந்து செக் குடியரசைச் சேர்ந்த ஓம்னிபோல் நிறுவனத்திடம் இருந்து பாகங்களை வாங்கிய பிஇஎம்எல் 1997ம் ஆண்டு முதல் இங்கிலாந்தைச் சேர்ந்த தத்ரா சிபாக்ஸிடம் இருந்து தத்ரா பாகங்களை ஏன் வாங்கத் துவங்கியது என்று சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.