வவுனியா, முல்லைத் தீவில் இந்திய எம்.பிக்கள் குழு: உடன் சென்ற 'காட்டிக் கொடுத்த' கருணா!
வவுனியா, செட்டிகுளம், புளியங்குளம், மாங்குளம், முல்லைத்தீவில் ஆய்வு இக்குழு ஆய்வு செய்தது.
பல லட்சம் தமிழர்களை அடைத்து வைத்திருந்த மாணிக் பண்ணை முகாமையும் (மானிக் பார்ம் முகாம்) இந்தியக் குழு பார்வையிட்டது. தகரக் கொட்டைகளில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு அடிப்படைவசதியுமின்றி 6 ஆயிரம் தமிழர்கள் அங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தங்களது பாதுகாப்பு தொடர்பாக மனம்திறந்து பேச முடியாத ஒரு வித இறுக்க நிலையிலேயே அம்முகாம்களில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களில் உள்ள தமிழர்களின் ஒரே கோரிக்கையாக இருப்பது "சொந்த இடத்தில் மீளக் குடியேற்றம் செய்ய வேண்டும்" என்பதுமட்டுமே.
6,000 தமிழர்களும் ஜூன் மாதம் இறுதிக்குள் சொந்த இடங்களில் குடியேற்றப்படுவர் என்று இலங்கை அமைச்சர் வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
பின்னர் புளியங்குளம், மாங்குளம் பகுதிக்குச் சென்று அங்கு, இந்தியா சார்பில் நடந்து வரும் ரயில் பாதை அமைக்கும் பணியை எம்.பி.க்கள் பார்வையிட்டனர்.
முன்னதாக முல்லைத் தீவு மாவட்ட மருத்துவமனைக்கு இந்தியா ரூ.3.60 கோடி செலவில் மருத்துவ உபகரணங்களை வழங்கியது.
முல்லைத்தீவில் பொன்னகர் வீடமைப்புத் திட்டத்தையும் இந்தியக் குழு தமிழர்களுக்கு வழங்கியது. முள்ளியவளையில் தண்ணீரூற்று பாடசாலையில் வகுப்பறைக் கட்டிடத்தைத் திறந்து வைத்து இருசக்கர வாகனங்களை இந்தியக் குழு வழங்கியது. மாஞ்சோலை மருத்துவமனையில் உபகரணங்களையும் இந்தியக் குழு கொடுத்தது.
இந்திய எம்.பி.க்களுடன் ராஜபக்சே தம்பி பசில் ராஜபக்சே, 'காட்டிக் கொடுத்த' கருணா, இலங்கை அமைச்சர் வீரக்கோன், இந்தியாவுக்கான யாழ்ப்பாண துணை தூதர் ஆகியோரும் உடன் சென்றனர்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள், இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈ.சரவணபவன், எஸ்.சிறிதரன் ஆகியோருடனும் இந்திய எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுடன் தமிழகத்தில் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸையும் ஒரே மேஜையில் உணவருந்த வைத்தது இந்தியக் குழு.