பொன்சேகா சிறைவாசம் ஏப்ரலுடன் ஓவர்..வெள்ளைக்கொடி வழக்கால் வெளியே வர முடியாது!
கொழும்பு: ஈழத்தில்நடந்த இறுதிக் கட்டப் போரின் போது தமிழர்களைக் கொத்துக் கொத்தாக கொன்ற சிங்கள ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்து பின்னர் ராஜபக்சே சகோதரர்களின் வெறுப்புக்குள்ளான சரத் பொன்சேகாவின் சிறைவாசம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இருந்தாலும் அவர் வெளியே வர முடியாது.
ஈழத்தில் நடந்த இறுதிக் கட்டப் போரை, ராஜபக்சே சகோதரர்களும், பொன்சேகாவும் இணைந்துதான் நடத்தினர். ராஜபக்சே சகோதரர்கள் ஏவ, அதை செம்மையாக நிறைவேற்றி தமிழர் பூமியை செங்குருதி பாய்ந்த நிலமாக மாற்றிய பெருமை பொன்சேகா தலைமையிலான ராணுவத்துக்கு உண்டு.
ஆரம்பத்தில் ராஜபக்சே சகோதரர்களுக்கு நல்லவராக தெரிந்த பொன்சேகா, அதிபர் பதவிக்கு ஆசைப்பட்டதால் கெட்டவராகிப் போனார். அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அவரை சட்டுப்புட்டென்று கேஸ் போட்டு உள்ளே வைத்து விட்டார் ராஜபக்சே.
அவர் மீது போடப்பட்ட வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சிறைத் தண்டனை ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இருந்தாலும் அவரால் வெளியே வரமுடியாது.
காரணம், வெள்ளைக் கொடி வழக்கில் விதிக்கப்பட்ட மூன்றரை ஆண்டு கால கடுங்காவல் சிறைத் தண்டனையை பொன்சேகா தொடர்ந்து அனுபவிக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.