திருடர்களுக்கு ஓட்டுப் போட்டால் எந்நாளும் துயரம்தான்-பொன்சேகா புலம்பல்!
கொழும்பு: திருடர்களுக்கு ஓட்டுப் போட்டு விட்டால் எந்த நாளும் துயரத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவத் தளபதியும், ஈழத் தமிழ் விடுதலைப் போரை தனது ராணுவ பலத்தால் நசுக்கியவருமான சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
தற்போது சிறையில் அடைபட்டுக்கிடக்கும் பொன்சேகா, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இன்று அரசாங்கம் போலியான வளர்ச்சி தொடர்பாக பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் மக்கள் இன்னும் வறுமையில்தான் வாடி வருகின்றனர். செலவுகளை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு செலவீனம் அதிகரித்துள்ளது.
திருடர்களுக்கு, கயவர்களுக்கு, செயற்திறனற்ற அரசியல்வாதிகளுக்கு வாக்களித்தால் மக்கள் எந்த நாளும் துயரங்களைத்தான் அனுபவிக்க நேரிடும். அனைவருக்கும் வெற்றி கிட்ட வேண்டுமென பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.