கோடை விடுமுறை:மேட்டுப்பாளையம்-குன்னூருக்கு சிறப்பு ரயில்-நாளை முதல் இயக்கம்
குன்னூர்: சுற்றுலாப் பயணிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு கோடை ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கோடை சீசனை முன்னிட்டு ஊட்டியில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மலை ரயிலில் பயணம் செய்ய வரும் ஜூன் மாதம் வரை முன்பதிவுகள் முடிந்துவிட்டது. மேலும் 10,000க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு கோடை ரயில்கள் இயக்கப்படும்.
ரயில் எண். 06135 மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.20 மணிக்கு குன்னூர் வந்து சேரும்.
ரயில் எண். 06136 மதியம் 1.30 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். சிறப்பு ரயில்கள் வரும் ஜூன் 10 ம் தேதி வரை இயக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.