சேது சமுத்திரத் திட்டம்: ராமருக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார்கள்- கருணாநிதி
அண்ணா அறிவாலயத்தில் அவர் அளித்த பேட்டி,
கேள்வி: சேது சமுத்திர திட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில், புதிதாக எதுவும் தெரிவிப்பதற்கில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: மத்திய அரசு மாத்திரமல்ல; பகுத்தறிவுவாதிகள் யாராக இருந்தாலும் அவர்களும், தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மீதும் அக்கறையுள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் எடுக்க வேண்டிய முடிவு, அது சேது சமுத்திர பாலத்தை அங்கே அமைக்க வேண்டுமென்பதாகத்தான் இருக்க முடியும்.
அதற்குப் பதிலாக அதை தேசிய சின்னமாக ஆக்குவது என்பது அவர்களுடைய ஆசைக்கு வேண்டுமானால் அது தேசிய சின்னமாக இருக்கலாம். ஏன் சேது சமுத்திரத் திட்டமே நிறைவேற்றப்பட்டு, அதற்குப் பிறகு அதை தேசிய சின்னம் என்று அறிவித்தால் என்ன ஆகிவிடும்?.
சேது சமுத்திரத் திட்டத்தை உருக்குலைப்பதற்காக ராமர் பெயரைப் பயன்படுத்தி அவருக்கும் கெட்ட பெயரை உண்டாக்குகிறார்கள். அதற்கு மத்திய அரசு துணை போகாமல் இருந்து இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி: இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு என்ன நிலை எடுக்க வேண்டுமென்று கருதுகிறீர்கள்?
பதில்: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஏற்கனவே ஆய்வுசெய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அங்கே அந்தத் திட்டம் நிறைவேற்றப்படலாம் என்று திட்டவட்டமாக சொல்லப்பட்டுள்ளது. எனவே அந்த ஆய்வு முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார் கருணாநிதி.