பாகிஸ்தான் விமான விபத்தில் 127 பேர் பலி- கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு
போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த "போஜா ஏர்' என்ற விமான சேவை நிறுவனம் தமது முதல் பயணத்தை இஸ்லாமாபாத் நோக்கி பறந்தது.
மாலை 5 மணிக்கு கராச்சியிலிருந்து புறப்பட்ட இந்த விமானம், மாலை 6.50 மணிக்கு இஸ்லாமாபாத் விமான நிலையத்தை அடைந்திருக்க வேண்டும். ஆனால், இறங்குவதற்குச் சற்று முன்னர் விமானத்தில் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ராவல்பிண்டி நகரை ஒட்டிய சக்லாலா விமானத் தளம் அருகே விமானம் விழுந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்தபோது, வானிலிருந்து தீப்பந்து ஒன்று தரையை நோக்கி வந்தது போன்ற காட்சியைப் பார்த்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
விமானம் விழுந்த இடம் குடியிருப்புப் பகுதியாகும். 40-க்கும் மேற்பட்ட வீடுகள் அந்த இடத்தில் இருக்கின்றன. மோசமான வானிலையே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ராணுவத்தினரும், பிற மீட்புக் குழுவினரும் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தனர். மிகச் சிறிய விமான நிறுவனமான "போஜா ஏர்', 10 ஆண்டுகளுக்கு முன்புதான் சேவையைத் தொடங்கியது. நிதி நெருக்கடியின் காரணமாக மூடப்பட்ட அந்த நிறுவனம், சமீபத்தில்தான் மீண்டும் விமானங்களை இயக்கியது. இப்போது விபத்துக்குள்ளாகியிருப்பது இந்தத் தடத்தில் இயக்கப்பட்ட போஜாவின் முதல் விமானம். மொத்தம் 127 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் எப்படி விபத்து நிகழ்ந்தது என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.