ஜப்பான் சுனாமியில் சுருட்டிச்செல்லப்பட்ட கால்பந்து அமெரிக்காவில் மீட்பு
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரும் சுனாமியில் சுருட்டிச் செல்லப்பட்ட கால்பந்து ஒன்று அமெரிக்காவில் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரும் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியம் அல்லவா!
ஜப்பான் சுனாமி வாரிச்சென்ற பொருட்கள் அனைத்தும் பசிபிக் கடலின் மறுமுனையான அலாஸ்கா, கனடா, வாசிங்டன் உள்ளிட்ட பகுதிகளைச் சென்றடையும் என்று கூறப்பட்டு வந்தது. இவை அனேகமாக 2013 அல்லது 2014-ம் ஆண்டு கரைசேரும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் கடலோரத்தில் வந்து குவிந்த சுனாமி குப்பைகளில் கால்பந்து ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. அதில் உரிமையாளரின் பெயர் விவரம் இருந்தது. பந்தை மார்ச் மாதம் கண்டுபிடித்த டேவிட் பக்ஸ்டெர் ஜப்பான் நிருபர் ஒருவர் உதவியுடன் உரிமையாளரைத் தேடும் பணியில் ஈடுபட்டார்.
கடைசியாக அந்த பந்து ஜப்பான் நாட்டின் ரிகுஜென்டாகாடா என்ற நகரத்தைச் சேர்ந்த முராகமி என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது. இந்தத் தகவலை முராகமிக்குத் தெரிவித்த போது அவரால் இதை நம்ப முடியவில்லை!
வீட்டோடு தொலைந்து போன கால்பந்து 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் மீட்கப்பட்டது மிகப் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது என்று அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்தபேட்டியில் தெரிவித்துள்ளார். நம்பவே முடியலைதான் ஆனாலும் கண்டெடுத்தவருக்கு மிக்க நன்றி என்று அவர் கூறியிருக்கிறார்.
சுனாமி கால்பந்தை கண்டெடுத்த தம்பதியினர் ஜப்பான் செல்லவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் முராகமியை நேரில் சந்தித்து பந்தை வழங்குவார்களா என்ற விவரம் தெரியவில்லை.