2ஜி ஸ்பெக்ட்ரம் விலையை 10 மடங்கு உயர்த்திய 'டிராய்': செல்போன் கட்டணமும் பல மடங்கு உயரும்!
இதன்படி லைசென்சுக்கான அடிப்படை விலை ரூ. 3,622.18 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை வாங்க விரும்பும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்று ரூ. 3,622.18 கோடிக்கும் அதிகமான விலையைத் தந்து தான் வாங்க முடியும்.
2ஜி லைசென்ஸ் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அடிமாட்டு விலைக்கு 9 நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட 122 லைசென்ஸ்களை ரத்து செய்தது. மேலும் ஸ்பெக்ட்ரம் லைசென்சுக்கு புதிய விலையை நிர்ணயிக்குமாறு டிராய்க்கு உத்தரவிட்டது.
இதையடுத்து 2ஜி லைசென்சுக்கு 2008ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருந்த விலையை விட 10 மடங்கு விலையை டிராய் நிர்ணயித்துள்ளது.
டிராய் பரிந்துரைத்துள்ள லைசென்ஸ் கட்டணம் மற்றும் விதிமுறைகள் விவரம்:
- சிடிஎம்ஏவுக்கான 800 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் மற்றும் ஜிஎஸ்எம் சேவைக்கான 900 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தின் லைசென்ஸ் கட்டணம் முந்தைய விலையைக் காட்டிலும் 2 மடங்கு அதிகரிக்கப்படும்.
- 1,800 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் லைசென்சின் அடிப்படை விலை ரூ. 3,622 கோடி.
- டெல்லி வட்டாரத்துக்கான விலை ரூ. 717 கோடி, மும்பை வட்டாரத்துக்கான விலை ரூ. 702 கோடி
- ஸ்பெக்ட்ரம் பெறும் நிறுவனங்கள் எதிர்காலத்தில் ஸ்பெக்ட்ரம் உபயோகக் கட்டணமாக தங்கள் மொத்த வருவாயில் ஒரு சதவீதத்தை உபயோகிப்புக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்
- அனைத்து லைசென்ஸ்களும் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும்.
- ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஸ்பெக்ட்ரம் வைத்துள்ள நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க முடியாது.
- 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் காலம் 20 ஆண்டுகள் மட்டுமே. அதன் பின்னர் மீண்டும் அதை நிறுவனங்கள் வாங்க வேண்டும்.
இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.
இப்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டண முறை மூலம் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் ஏலம் விடப்பட்டால் அரசுக்கு ரூ. 7 லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு 3ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஏலம் விடப்பட்டதன் மூலம் அரசுக்குக் கிடைத்த ரூ. 1.04 லட்சம் கோடியை விட இது 7 மடங்கு அதிகமாகும்.
தற்போது உலகிலேயே இந்தியாவில்தான் செல்போன் கட்டண விகிதங்கள் குறைவாக உள்ளன. டிராய் அமைப்பின் இந்த பரிந்துரை காரணமாக ஸ்பெக்ட்ரம் வாங்க செல்போன் நிறுவனங்கள் மிக அதிகமாக செலவு செய்ய வேண்டி வரும். இதனால் செல்போன் கட்டணங்களும் மிக அதிக அளவில் உயரும் என்று தெரிகிறது.
இந்த கட்டண உயர்வுகள் அமலானால், மிஸ்டு கால்களின் எண்ணிக்கை தான் அதிகமாகும்!
பல்வேறு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் டிராய் அமைப்பின் சிபாரிசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.