சாதிக் பாட்சா சாவு தற்கொலை தான்: வழக்கை மூடுகிறது சிபிஐ!
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா.
அவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாகத் தொங்கினார். சிபிஐ விசாரணைக்காக டெல்லி செல்ல வேண்டிய நிலையில் அவர் மர்மமாக இறந்தார்.
இந்த மரணம் குறித்து பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கில் சிபிஐ தனது விசாரணையை கிட்டத்தட்ட முடிக்கும் நிலையில் உள்ளது. விரைவில் சிபிஐ தனது அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாதிக் பாட்சாவின் சாவில் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை, அது தற்கொலை தான் என்ற முடிவுக்கு சிபிஐ வந்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து இந்த வழக்கில் அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு வழக்கை சிபிஐ மூடவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த சாதிக் பாட்சா ஆரம்ப காலத்தில் தனது ஊரை சுற்றியுள்ள பகுதிகளில் சைக்கிளில் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். 6 ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் மாவட்டம் சென்று ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட தொடங்கினார்.
பின்னர் ராசாவுக்கு அறிமுகமானார். இதையடுத்து பெரும் கோடீஸ்வரரானார். கடந்த 2004ம் ஆண்டு கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை சாதிக் பாட்சா தொடங்கினார்.
இதில் ராசாவின் மனைவி பரமேஸ்வரியும், இயக்குனரானார்.
ரூ.1 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியது. இந்தப் பணம் முறையாக ஈட்டப்பட்டதல்ல என்றும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதால் ராசாவுக்கு கைமாறப்பட்ட பணம் என்று சிபிஐ சந்தேகிக்கிறது.
இந் நிலையில் தான் சாதிக் பாட்சாவை சிபிஐ தோண்டித் துருவ ஆரம்பித்தது. இதையடுத்தே அவர் வீட்டில் தூக்கில் தொங்கினார். இந்த மரணத்தில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் அப்போது ஆட்சியிலிருந்த திமுக அரசு இந்த வழக்கை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைத்துவிட்டது.