கடத்தப்பட்ட பிஜூ ஜனதாதள எம்.எல்.ஏவை விடுவிக்க மாவோயிஸ்டுகள் ஒப்புதல்!
புவனேஸ்வர்: கடத்தப்பட்ட பிஜூ ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ ஜீனா ஹிகாகாவை நாளை விடுவிப்பதாக மாவோயிஸ்ட் நக்சலைட்கள் தகவல் அனுப்பியுள்ளனர்.
நாளை காலை 10 மணியளவில் அவரை கோராபூட்டில் விடுவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஹிகாகா விடுவிக்கப்படுவதாகவும் நக்சலைட்கள் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 24ம் தேதி ஹிகாகா கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க பல பேரங்களைப் பேசினர் மாவோயிஸ்டுகள். கைது செய்யப்பட்ட நக்சலைட்களை விடுவிக்க வேண்டும் என்பது அதில் முக்கியமான ஒன்று. மாவோயிஸ்டுகளின் பல கோரிக்கைகளை அரசு ஏற்பதாக வாக்குறுதி அளித்தது.
இதையடுத்து இன்று நாராயண பட்னா என்ற பகுதியில் மாவோயிஸ்ட்கள் மக்கள் நீதிமன்றம் என்ற முடிவெடுக்கும் கூட்டத்தை கூட்டினர். இதற்காக நாராயணபட்னாவுக்குச் செல்லும் வழிகள் அனைத்தையும் அவர்கள் தடைகளை ஏற்படுத்தி மூடி விட்டனர். இதனால் நாராயண பட்னாவுக்கும், மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன.
மேலும் மாவோயிஸ்ட் வாரத்தையும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையி்ல்தான் எம்.எல்.ஏவை விடுவிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேசமயம், ஒரு நிபந்தனையையும் அவர்கள் எம்.எல்.ஏவுக்கு விதித்துள்ளனர். மாவோயிஸ்டுகளுக்கு கூறியபடி அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் ஹிகாகா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட வேண்டும் என்பதே அது.