கலெக்டரை விடுவிக்க மாவோயிஸ்டுகளுடன் இன்று பேச்சுவார்த்தை துவக்கம்?
ராஞ்சி: சத்தீஸ்கர் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை விடுவிக்க இன்று பேச்சுவார்த்தை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவோயிஸ்டுகளால் நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்களான முன்னாள் தேசிய எஸ்.சி./எஸ்.டி. கமிஷன் தலைவர் பி.டி. சர்மா மற்றும் பேராசிரியர் ஹர்கோபால் ஆகியோர் இன்று பஸ்தார் செல்கின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெஸ் பால் மேனன் பஸ்தார் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்துமா இருக்கும் கலெக்டரின் உடல்நிலை நேற்று மோசமானதாகக் கூறப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து அறிந்த அவரது மனைவி ஆஷா தனது கணவரை விடுதலை செய்யுமாறு மாவோயிஸ்டுகளை மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கலெக்டரின் உடல்நிலை மோசமாகியுள்ளது அதனால் அவருக்குத் தேவையான மருந்துகளை அனுப்பி வையுங்கள் என்று மாவோயிஸ்டுகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவரது உடல்நிலை மோசமாகி அவருக்கு ஏதாவது ஆனால் அதற்கு மாநில அரசு தான் பொறுப்பு என்று மாவோயிஸ்டுகள் கூறியதையடுத்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் நேற்று தெரிவித்தார்.
கலெக்டரை விடுவிக்க மாவோயிஸ்டுகள் மற்றும் பஸ்தார் பகுதி பழங்குடியின இயக்கத்துடன் தொடர்புடைய முன்னாள் தேசிய எஸ்.சி./எஸ்.டி. கமிஷன் தலைவர் பிடி சர்மா மற்றும் பேராசிரியர் ஹர்கோபால் ஆகியோர் மத்தியஸ்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று ராய்பூர் சென்று அங்கிருந்து பஸ்தார் பகுதிக்கு செல்கிறார்கள்.
இதையடுத்து அவரை விடுவிப்பது குறித்த பேச்சுவார்த்தை இன்று துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.