சங்கரராமன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு அரசு வக்கீல் ஆதரவு : புதுவை நீதிமன்றத்தில் புகார்
புதுச்சேரி: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசு வழக்கறிஞர் தேவதாஸ் செயல்படுவதால் அவரை நீக்க வேண்டும் என்று சங்கரராமன் மகன் ஆனந்த் சர்மா புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் வழக்கை விசாரித்த நீதிபதி ராமசாமியுடன் பேரம் பேசியதாக வெளியான டேப் முதலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் புதிய நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு விசாரணை தொடங்கிய நிலையில் வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று சங்கரராமன் மனைவி பத்மா புதிய மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் வரையில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார் பத்மா. இதனை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரியில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன் பத்மா மற்றும் அவரது மகன் ஆனந்த் சர்மாவுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் புதுச்சேரி நீதிமன்றத்தில் சங்கரராமன் மகன் ஆனந்த் சர்மா இன்று ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அரசு வழக்கறிஞர் தேவதாஸ் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் பிறழ் சாட்சியங்களான 83 பேரிடம் எந்தவித குற்றுக்குவிசாரணையும் தேவதாஸ் நடத்தவில்லை என்றும் அதனால் அரசு வழக்கறிஞரை இந்த வழக்கில் நீக்கிவிட்டு வேறு ஒரு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்றும் அதில் ஆனந்த் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.