அழகிரியின் சைபர் பார்க்கில் மேலும் ஒரு விதி மீறல்- நடவடிக்கையில் மாநகராட்சி!
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்குச் சொந்தமான தயா சைபர் பூங்காவில் மேலும் ஒரு விதி மீறல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தவறான முறையில் மாநகராட்சியின் வரிச்சலுகையை இந்த சைபர் பூங்கா பெற்றிருப்பதாக அந்தக் குற்றச்சாட்டு கூறுகிறது.
மதுரை மாட்டுத்தாவணி அருகே தயா சைபர் பூங்கா. இங்கு மாநகராட்சிக்குச் சொந்தமான 8 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து விட்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
இந்த நிலையில் இன்னொரு குற்றச்சாட்டை மாநகராட்சி கூறியுள்ளது. இதுகுறித்து மேயர் ராஜன் செல்லப்பா கூறுகையில்,
முந்தைய திமுக நிர்வாகத்தில், ஏ,பி,சி,டி என, நான்கு வகையான வரிவிதிப்பை நடைமுறைப்படுத்தினர். தயா சைபர் பூங்கா அமைந்துள்ள ரோடு, மாநகரப் பகுதியில் உள்ளது. ஆனால் அதை, சம்பக்குளம் (கிராமம்) ரோடு என்ற பெயரை காட்டி, குறைந்த வரி கொண்ட டி பிரிவாக மாற்றியுள்ளனர்.
மாநகராட்சிப் பகுதியில் உள்ள சைபர் பூங்கா எப்படி டி பிரிவில் வரும்? எனவே தவறான வழியில் வரிச்சலுகையைப் பெற்றுள்ளனர். மத்திய அமைச்சரே தவறான வழியில் வரிச்சலுகை பெற்றிருப்பதால், நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்துள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதியை ஏ பிரிவில் சேர்க்கப் போகிறோம். இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ. 1.50 கோடி வருவாய் கிடைக்கும். மேலும் இந்த விதி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.