அலெக்ஸ் நாளை விடுவிக்கப்படுவார்.. 'எஸ்எம்எஸ்' அனுப்பிய மாவோயிஸ்டுகள்!
இது தொடர்பாக மாவோயிஸ்டுகள் சார்பில் அங்குள்ள செய்தி நிறுவனங்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மாநில அரசின் பிரதிநிதிகளுக்கும் மாவோயிஸ்டுகள் நியமித்த மத்தியஸ்தர்களுக்கும் இடையே நடைபெற்ற 4வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து எட்டப்பட்டதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை மேனன் விடுவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
இரண்டு பக்க உடன்பாடு:
இது தொடர்பாக இரண்டு பக்க உடன்பாடு ஒன்று உள்துறை முதன்மைச் செயலர் என்.கே. அஸ்வால் முன்னிலையில் திங்கள்கிழமை கையெழுத்தானது. இந்த உடன்பாட்டில், இரு தரப்பு மத்தியஸ்தர்களும் கையெழுத்திட்டனர்.
மேனனை விடுவிப்பதற்கு கைமாறாக சிறையில் இருக்கும் தங்களது 8 தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்ற மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. ஆனால் அதேநேரத்தில், அரசுப் பிரதிநிதிகளில் ஒருவரான நிர்மலா புச்சின் தலைமையில் உயர் அதிகாரமளிக்கப்பட்ட கமிட்டி ஒன்றை அமைக்க மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அந்தக் கமிட்டி, சத்தீஸ்கர் சிறைகளில் உள்ள அனைத்துக் கைதிகளின் வழக்குகளையும் மறு ஆய்வு செய்யும். இந்த மறு ஆய்வில் மாவோயிஸ்டுகள் கோரிய கைதிகளின் வழக்குகளும் அடங்கும்.
இந்தக் கமிட்டியில் மாநிலத்தின் தலைமைச் செயலரும் காவல்துறைத் தலைவரும் உறுப்பினர்களாக இடம்பெறுவர்.
அலெக்ஸ் பால் மேனன் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கமிட்டியின் செயல்பாடு அமலுக்கு வரும். இந்த உடன்பாடு எட்டப்படுவதற்கு முன், மாவோயிஸ்டுகள் மே 2ம் தேதியை கெடுவாக நிர்ணயித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சட்டிஸ்கர் முதல்வர் ரமன் சிங் நேற்று கூறுகையில், இன்னும் 48 மணி நேரத்திற்குள் மேனனை விடுவிக்க மாவோயிஸ்டுகள் ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இந் நிலையில் நக்ஸல்களிடமிருந்து எஸ்எம்எஸ் வந்துள்ளது.
மேனன் மனைவி ஆஷா மகிழ்ச்சி:
மேனனின் மனைவியான ஆஷா, இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் விரைவில் நலமுடன் திரும்பி குடும்பத்துடன் இணைவார் என்று நம்புவதாக அவர் கூறினார்.
ஆஷா இப்போது 6 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.