திருச்சூர் பூரம் விழாவில் யானைக்கு திடீர் மதம்- பக்தர்கள் அலறி ஓடியதில் 62 பேர் காயம்
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மாண்டமான யானைகள் பங்கேற்கும் பூரம் திருவிழாவில் இந்த ஆண்டும் ஒரு யானை மதம் பிடித்து பிளிறி ஓட திருவிழா இடமே களேபரமானது.
திருச்சூர் வடக்குநாதர் சிவன் கோயில் பூரம் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் சாமி சிலைகளுடன் ஊர்வலமாக செல்லும். இதனை பார்ப்பதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் திரளவர்.
இந்த ஆண்டுக்கான பூரம் விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன. யானைகளின் அலங்கரிப்பையும் ஊர்வலத்தையும் நாள்தோறும் பார்வையிட்டு வந்தனர். திருவிழாவின் கடைசி நாளான நேற்று யானைகள் தங்கள் இருப்பிடங்களுக்கு பிரிந்து செல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது காளிதாசன் என்ற யானையை அருகில் இருந்த யானை தந்தத்தால் குத்தி வலி ஏற்படுத்திவிட அந்த இடமே கிலி கொண்டது. காளிதாசன் யானை பிளிறி ஓடி எதிர்பட்ட கடைகளை துவம்சம் செய்து. வாகனங்களை தூக்கி வீசி பாகனை கீழே தூக்கிப் போட்டது. இதனால் பெரும் நெரிசலும் பதற்றமும் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உட்பட 62 பேர் படுகாயமடைந்தனர்.
உடனே சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட கால்நடை மருத்துவக் குழுவினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். யானை கட்டுக்குள் வர 30 நிமிடங்களானது. இச்சம்பவத்தால் திருச்சூரில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
திருச்சூர் பூரம் திருவிழாவில் எப்படியும் ஏதேனும் ஒரு யானைக்கு மதம் பிடிப்பதும் களேபரமாகி உயிரிழப்பு வரை செல்வதும் வாடிக்கையாகிவருவது குறிப்பிடத்தக்கது.