மாவோயிஸ்டுகளால் விடுவிக்கப்பட்ட ஆட்சியர் அலெக்ஸ்பால் மேனன் வீடு சென்றடைந்தார்- உற்சாக வரவேற்பு
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியரான தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ்பால் 13 நாட்களுக்கு முன்பு மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். அவரை விடுதலை தொடர்பாக மாவோயிஸ்டு பிரதிநிதிகளும் அரசுத் தரப்பு பிரதிநிதிகளும் 4 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் அலெக்ஸ்பால் மேனனை நேற்று மாவோயிஸ்டுகள் விடுதலை செய்தனர். டட்மெட்லா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் தூதுக்குழுவினரிடம் அலெக்ஸ்பால் மேனனை ஒப்படைத்தனர். பின்னர் மாலையில் சிந்தல்நார் என்ற இடத்தை அவர்கள் வந்தடைந்தனர்.
சிந்தல்நாரிலிருந்து ஆட்சியரின் வீடு உள்ள சுக்மா 87 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அலெக்ஸின் உடல்நிலை சோர்வாக இருந்ததால் சிந்தல்நாரிலேயே அலெக்ஸ் தங்கியிருந்தார். இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு காலை 9.30 மணியளவில் சுக்மா வந்து சேர்ந்தார்.
சுக்மா வந்த அலெக்ஸ்பால் மேனனை உறவினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இன்று பிற்பகல் தலைநகர் ராய்ப்பூர் செல்லும் அலெக்ஸ்பால் மேனன் முதல்வர் ரமண்சிங்கை சந்தித்துப் பேச உள்ளார்.