வந்தது கத்திரி... இன்று முதல் வெயில் மண்டையைப் பிளக்கும்
சென்னை: கத்திரி எனப்படும் அக்னிநட்சத்திர வெயில் இன்று தொடங்கியுள்ளது. இன்னும் 21 நாட்களுக்கு வெயில் மண்டையைப் பிளக்கும். இதனால் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் வெளியில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மாதம் ஒரு ராசி என 12 மாதங்களுக்கும் 12 ராசியில் சஞ்சரிப்பார் சூரியன். அந்த வகையில், மேஷம் ராசி பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் நாள் தொடங்கி, ரோகிணி நட்சத்திரம் முதல் பாதத்தில் சஞ்சரிக்கும் நாள் வரையுள்ள காலத்தை அக்னி நட்சத்திரம் என்கிறோம்.
இது சித்திரை மாதம் 21ம் தேதி முதல் வைகாசி மாதம் 14ம் தேதி வரை இருக்கும். அதன்படி இன்று காலை 7.53 மணிக்கு அக்னி நட்சத்திர காலம் தொடங்கியுள்ளது. இது மே 28ம் தேதி பிற்பகல் 12.45 மணி வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் சூரியன் பூமிக்கு அருகில் நெருங்கி வரும். இதனால்தான் இந்த சமயத்தில் கடும் வெப்பம் தகிக்கும்.
அக்னி நட்சத்திர காலத்தில் வெப்ப நோய்கள் மனிதர்களைத் தாக்கும். அம்மை உள்ளிட்டவை ஏற்படலாம். உடல் வெப்பம் அதிகரிப்பதால் நீர்ச்சத்து குறையும். இதனால்தான் இந்த வெயில் காலத்தில் கடும் கவனத்துடன் இருப்பது அவசியமாகிறது. கடும் வெயிலில் அலைய நேரிடும்போது சன் ஸ்டிரோக் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அக்னி நட்சத்திர காலத்தில் மிகுந்த கவனத்துடன் வெளியில் போவது நல்லது.
அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகளை அதிக அளவில் குடிப்பது உத்தமம். எலுமிச்சம் பழச் சாறு மிக மிக நல்லது. சாப்பாட்டிலும் கூட கவனம் செலுத்தலாம். மீன் போன்ற உஷ்ணத்தைக் கிளப்பும் விஷயங்களைத் தவிர்க்கலாம்.
வெளியில் போய் விட்டு வந்ததும் பிரிட்ஜைத் திறந்து குளுகுளு நீரைக் குடிக்கக் கூடாது. கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதேபோல வெளியில் போய் விட்டு உடனே ஏசி ரூமுக்குள் நுழைந்து விடக் கூடாது.
எதைச் செய்கிறோமோ இல்லையோ, நிறைய தண்ணீர் குடியுங்கள். அதுவே உடல் வெப்பத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமோகமாக உதவும்.