வேகமாக வீசும் காற்றால் மின் உற்பத்தி கூடுகிறது- கரண்ட் 'கட்' மேலும் குறையும்!
சென்னை: காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு மேலும் பலமாக கூடியுள்ளதால், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டின் அளவு மேலும் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் மின்வெட்டில் சிக்கிச் செத்துக் கொண்டிருந்த தமிழக மக்களுக்கு காற்றாலைகள் மூலம் லேசான விடியல் கிடைத்துள்ளது. காற்றின் வேகம் சமீப நாட்களாக அதிகரித்து வருவதால் காற்றாலைகள் மூலம் தயாராகும் மின்சாரம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் சில நாட்களாக வெகுவாக மின்வெட்டு குறைந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு காற்றாலை மூலம் 1,998 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. ஆனால் மே 1ம் தேதி காற்றின் வேகம் குறைந்ததால், 1,453 மெகாவாட்டாக குறைந்தது. ஆனால் 2ம் தேதி மீண்டும் காற்று வேகம் பிடித்தது. இதனால் நேற்று முன்தினம் மாலை ஒரே நாளில் 2462 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது.
வரும் நாட்களில் காற்றின் வேகம் இதேபோல மேலும் அதிகரித்து வந்தால் மின்சாரத்தின் அளவும் அதிகரிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.