வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கொடுக்கலைன்னா...சிறைகள் நிரம்பும்: ராமதாஸ் எச்சரிக்கை
சென்னை: வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளதாக அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்கத்தின் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழாவில் அவர் பேசியதாவது:
வன்னியர் பரம்பரை நாடாண்ட பரம்பரை. மீண்டும் நாம் நாட்டை ஆளவேண்டும். இலவசங்களை கொடுத்து நாட்டை சின்னாபின்னமாக்கி விட்டார்கள். 45 ஆண்டுகளாக ஆட்சியை நடத்திய இவர்களுக்கு ஆள தகுதி இல்லை.
இடஒதுக்கீடு போராட்டம்
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு, போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்து உள்ளது. அப்படியொரு போராட்டத்தை மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தினால் தமிழகம் தாங்குமா? எங்கள் இளைஞர்கள் போராட தயாராக இருக்கிறார்கள். அவர்களை என்னாலேயே கட்டுப்படுத்த முடியாது.
தமிழக சிறைகளை நிரப்ப லட்சக்கணக்கான பாட்டாளி இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். நாங்கள் சிறை செல்ல தயங்க மாட்டோம். நானும் ஒரு வருடம் சிறையில் இருக்க தயார். ஆகவே போராட்டம் அறிவிப்பதற்கு முன்னதாக வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை அறிவியுங்கள். எந்த மாதிரியான போராட்டம்? எப்படி அந்த போராட்டத்தை நடத்துவோம் என்பதை விரைவில்அறிவிப்போம் என்றார் அவர்.
தீர்மானங்கள்
முன்னதாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதேபோல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறப்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்
- மத்திய அரசில் வன்னியர்களுக்கு 2 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
- சாதிவாரி கணக்கெடுப்புக்கு பதில் சமூக, பொருளாதார, சாதி கணக்கெடுப்பை தற்போது நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறது. இது உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பு அல்ல. இதன் விவரங்கள் எதுவும் வெளியிடப்படாது.
- தமிழ்நாட்டில் 69 விழுக்காட்டை இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 13.7.2010 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை நிர்ணயிக்கும்படி தமிழக அரசுக்கு ஆணையிட்டது. ஆகையால் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.
- தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை படிப்படியாக குறைத்து முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.