தங்க நகைகள் மீதான உற்பத்தி வரி ரத்து: பிரணாப் முகர்ஜி
மார்ச் மாதம் தாக்கல் செய்ய மத்திய பொது பட்ஜெட்டில் தங்கம் மீது உற்பத்தி வரி மற்றும் இறக்குமதி வரி விதிக்கப்பட்டதாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் உள்ள நகைக்கடை உரிமையாளார்கள் மற்றும் நகைத்தொழிலாளர்கள் சார்பில் போராட்டங்கள் நடந்தன.
கால வரையற்ற கடை அடைப்பு போராட்டத்தை அறிவித்த நகை விற்பனையாளர்கள் இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய நிதி அமைச்சரையும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து வரிவிதிப்பை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த சந்திப்பின் போது அவர்களுடைய கோரிக்கை பரிசீலிக்கப்படும் என கூறப்பட்டது. இதனால் போராட்டங்கள் கைவிடப்பட்டு நகைக்கடைகள் மீண்டும் இயங்கத் தொடங்கின. இந்நிலையில், தங்கம் மீதான வரியை ரத்து செய்வதாக பிரணாப் முகர்ஜி திங்கட்கிழமையன்று மக்களவையில் தெரிவித்தார். பிராண்டட் மற்றும் பிராண்டட் அல்லாத நகைகள் மீதான வரியை ரத்து செய்வதாக அறிவித்த அவர், ரூ.5 லட்சம் வரை நகை வாங்குபவர்களுக்கு உற்பத்தி வரி கிடையாது எனவும் அறிவித்தார்.
பட்ஜெட்டில் ரூ. 2 லட்சத்துக்கு மேல் நகை வாங்குபவர்களுக்கு உற்பத்தி வரி விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.