சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு குறித்து ஹில்லாரியுடன் பேசவில்லை- மமதா
ஹில்லாரி கிளிண்டனுடனான சந்திப்புக்குப் பின்னர் ரைட்டர்ஸ் பில்டிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மமதா பானர்ஜி. அப்போது அவர் கூறுகையில்,
ஹில்லாரி கிளிண்டனை சந்திக்க நான் பெரும் ஆர்வமாக இருந்தேன். தற்போது நடந்த சந்திப்பு மகிழ்ச்சி தருகிறது, பயனுள்ளதாக இது இருந்தது.
எனக்கு தாகூரின் கவிதை வரிகள் பொதிக்கப்பட்ட துணி ஒன்றைப் பரிசாக அளித்தார் ஹில்லாரி.
விவேகானந்தரால் புகழ் பெற்ற சிகாகோ சர்வ சமய மாநாட்டைப் போல கொல்கத்தாவில் ஒரு மாநாட்டை நடத்த விரும்புவதாக நான் ஹில்லாரியிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் ஆதரவு தெரிவித்தார்.
கொல்கத்தாவை மாபெரும் தகவல் தொடர்பு மையமாக மாற்ற எனது அரசு ஆர்வத்துடன் இருப்பதை அவரிடம் தெரிவித்தேன். அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் விளக்கினேன்.
எனது அரசு செயல்பட்டு வரும் விதத்தை ஹில்லாரி கிளிண்டன் பாராட்டினார். மேற்கு வங்கத்தில் அமெரிக்கா பெருமளவில் முதலீடு செய்யும் என்றும் உறுதியளித்தார்.
அரசியல் காரணங்களால்தான் இத்தனை காலமாக அமெரிக்காவிலிருந்து எந்த முதலீடும் மேற்கு வங்கத்திற்கு வராமல் போய் விட்டது. ஆனால் இப்போது அந்தச் சூழ்நிலை இல்லை. எனவே பெருமளவிலான அமெரிக்க முதலீடுகள் இனி சாத்தியமானதே என்று ஹில்லாரி கூறியுள்ளார். வங்க திரைப்படத் துறையிலும் பெருமளவில் அமெரிக்கா முதலீடு செய்ய நல்ல வாய்ப்புள்ளதாக அவரிடம் நான் தெரிவித்தேன்.
ஷாருக்கான் குறித்தும் நான் ஹில்லாரியுடன் பேசினேன். அவர் இந்தியாவில் மிகப் புகழ் பெற்ற நடிகர் என்பதையும் அவரிடம் விளக்கினேன் (அமெரிக்காவுக்குப் போகும்போதெல்லாம் ஷாருக்கை அமெரிக்க அதிகாரிகள் அவமதிப்பதை சுட்டிக் காட்டி இப்படிப் பேசினார் மமதா)
சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடுகள் குறித்து ஹில்லாரியுடன் நான் பேசவில்லை. அவரும் அதை எழுப்பவில்லை.
கல்வியில் நிறைய முதலீடு செய்ய விரும்புவதாக கொள்கை அளவில் ஹில்லாரி ஒப்புக் கொண்டார். மேலும் மேற்கு வங்க மாநில வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மொத்தத்தில் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக, ஆக்கப்பூர்வமானதாக, உருப்படியானதாக இருந்தது என்றார் மமதா.