தேசிய ஒலிம்பியாட் கழகத்தின் 'பரம்ப்'!
2 முக்கிய குறிக்கோள்களுடன் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சிறார்கள் எதிர்காலக் கல்வியில் சிறந்த வாய்ப்புகளைப் பெறும் வகையில் அவர்களுக்கு பயிற்சிகள், தேர்வுகள் உள்ளிட்டவற்றை நடத்தி அவர்களை தயார்படுத்துவது ஒன்று. இரண்டாவது, ஆசிரியர்களுக்கு சிறந்த முறையிலான போதனா முறைகளை மேற்கொள்வது குறித்த பயிற்சிகளை அளித்து அவர்களின் திறனை மேம்படுத்துவது.
நாடு முழுவதும் பள்ளி மாணாக்கர்களுக்கு திறன் அறி தேர்வுகளை நடத்தி வரும் அமைப்புதான் தேசிய ஒலிம்பியாட் கழகமாகும்.
வசதியில்லாத ஏழை சிறார்களும் கல்வியில் சிறந்து விளங்கவும், அவர்களது வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு கிரை, ஸ்மைல் பவுண்டேஷன் போன்ற அமைப்புகளுடன் கை கோர்த்து இத்தகைய சிறார்களுக்கு கல்வி உதவித் தொகை உள்ளிட்டவை கிடைக்கவும் தேசிசய ஒலிம்பியாட் கழகம் பாடுபடுகிறது.
பரம்ப் திட்டம் என்றால் என்ன...
தற்போது நகரங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஏகப்பட்ட திறனறி சோதனைகள், பரீட்சைகள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. இதனால் அவர்கள் பல்வேறு வகையில் சிறந்து விளங்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இத்தகைய சிறந்த வாய்ப்புகள் குடிசைப் பகுதிகளில் வாழும் சிறார்களுக்கும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் கிடைப்பதில்லை. மேலும் ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, எய்ம்ஸ் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பெரும்பாலும் நகர்ப்புற மாணவர்களே அதிகம் படிக்கின்றனர், தேர்வாகின்றனர். இத்தகைய வாய்ப்பும் குடிசைப் பகுதி மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை.
இத்தகைய நிலையைப் போக்கி இவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கவும், உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவும், தங்களது திறமைகளை மெருகேற்றிக் கொள்ளவும் வாய்ப்பளிக்கவே இந்த பரம்ப் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் சிறந்த முறையில் தேர்வாகும் சிறந்த மாணவர்களுக்கு ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை ஸ்காலர்ஷிப் கிடைக்கும். மேலும் அவர்களுக்கு டேப்லெட் கம்ப்யூட்டர்கள், புத்தகங்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும்.
மேலும் பிளஸ்டூ மாணவர்களுக்கு பிஎம்டி, ஜேஇஇ, சிஇடி உள்ளிட்டவற்றுக்குத் தேவையான நூல்கள் உள்ளிட்டவை வழங்கப்படும்.
இந்தத் தேர்வுகள், பயிற்சிகளில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற தேர்வாகும் மாணவர்களுக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய ஒரு மாணவருக்கு ரூ. 300 வரை செலவாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் 2012-13ம் ஆண்டு கால கட்டத்தில் 25,000 மாணவர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.