பாசி நிறுவன வழக்கில் பிரமோத்குமார் எந்த உத்தரவையும் எனக்குப் பிறப்பிக்கவில்லை-டிஐஜி பாலநாக தேவி
பாசி நிறுவன மோசடி சமயத்தில் கோவை சரக டிஐஜியாக இருந்தவர் பால நாகதேவி. அப்போது கோவை மேற்கு மண்டல ஐஜியாக இருந்தவர் பிரமோத்குமார். பிரமோத்குமார் உத்தரவுப்படி பாலநாக தேவி செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அவரிடம் சிபிஐ அதிகாரிகளும் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பாலநாகதேவி மாலைமலருக்கு அளித்துள்ள பேட்டியில், நான் 1995 ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று பணிக்கு வந்தேன். கோவை சரக டிஐஜி யாக கோவையில் பணியாற்றியபோதுதான் பாசி நிறுவன மோசடி வழக்கும் மோசடி நபர்களிடம் போலீசார் மிரட்டி பணம் பறித்த சம்பவமும் நடந்தது.
அப்போது திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சாந்தி இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பு போலீஸ் சூப்பிரண்டாக இருந்த கோவை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன்தான் பாசி நிறுவன மோசடி குறித்து முதன்முதலாக புகார் மீது வழக்கு பதிவு செய்தார்.
பாசி நிறுவன பங்குதாரர்களிடம் திருப்பூரை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் மோகன் ராஜ், சண்முகையா ஆகியோர் மிரட்டி பணம் பறித்த விவகாரம் முதலில் எனக்கு தெரியாது. பின்னர் திருப்பூருக்கு புதிதாக வந்த போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் இதுபற்றி எனக்கு ரிப்போர்ட் அனுப்பி இருந்தார்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சண்முகையா ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டேன். இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. சம்பந்தப்பட்ட போலீசார் எவ்வளவு பணம் மிரட்டி பெற்றனர் என்பது தெரியாது. ஆனால் பணம் பெற்றது உண்மை. அதனால்தான் அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பாசி நிறுவன பங்குதாரர்களிடம் பணம் பறித்த விவகாரம் முதலில் எனது கவனத்துக்கு வரவில்லை. வந்திருந்தால் அப்போதே நடவடிக்கை எடுத்திருப்பேன். என்னிடம் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து முடித்து விட்டனர்.
விசாரணையின் போது அவர்கள் கேட்ட நிர்வாக ரீதியிலான கேள்விகளுக்கு உரிய பதில் அளித்து உள்ளேன். ஐ.ஜி. பிரமோத்குமார் பணம் பெற்றது குறித்து என்னிடம் அவர்கள் கேட்கவில்லை. ஐ.ஜி. பிரமோத்குமார் உயர் அதிகாரி என்ற முறையில் தெரியும். மற்றபடி இந்த வழக்கில் சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அவர் எனக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றார் அவர்.