கல்யாணத்திற்குப் போன இடத்தில் கல்வீச்சை சந்தித்த அமைச்சர்!
கமுதி அருகே உள்ள புல்வாய்குளம் கிராமத்தில் நேற்று அதிமுக பிரமுகர் ஒருவர் வீட்டு திருமணம் நடந்தது. இதில் பங்கேற்க அமைச்சரும், பரமக்குடி எம்.எல்.ஏவுமான சுந்தர்ராஜ் வந்தார். கல்யாணத்தையொட்டி அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். அருகில் உள்ள கோவிலில் அது தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு சென்றார் அமைச்சர். போன இடத்தில் திருக்கோவில் அன்னதானத் திட்டம் பற்றிப் பேச ஆரம்பித்தார். அத்தோடு நிற்காமல், இங்கு நடக்கும் அன்னதானத்திற்கும் கூட அம்மாதான் காரணம் என்று ஒரு புளோவில் பேசி விட்டார்.
இதைக் கேட்டு கஷ்டப்பட்டு காசு போட்டு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் கடுப்பாகி விட்டனர். அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சிலர் அமைச்சரை நோக்கி கற்களை வீச ஆரம்பித்தனர். இதைப் பார்த்து அமைச்சர் பயந்து போனார். உடனே அவசரம் அவசரமாக அங்கிருந்து வெளியேறி வேகம் வேகமாக தனது காரில் ஏறி போயே போய் விட்டார்.
கல்யாணத்திற்குப் போன இடத்தில் கல்வீச்சை சந்தித்த அமைச்சரின் கதைதான் தற்போது பரமக்குடி முழுவதும் பேச்சாக உள்ளது.