ஒரிசா: எஸ்.ஐயை கடத்திச் சென்று சுட்டுக் கொன்ற மாவோயிஸ்டுகள்!
புவனேஸ்வர்: ஒரிசாவில் இன்று காலை கடத்தப்பட்ட துணை சப்-இன்ஸ்பெக்டர் க்ருபாராம் மாஜ்ஹியை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஒரிசா மாநிலம் நவ்பதா மாவட்டத்தில் உள்ள தர்ம்பந்தாவில் பணிபுரியும் துணை சப்-இன்ஸ்பெக்டர் க்ருபாராம் மாஜ்ஹி இன்று காலை 10 மணி அளவில் உள்ளூர் மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது அவரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். வழக்கமாக கடத்தியவரை வைத்துக்கொண்டு அரசிடம் பேரம் பேசுவது போல் செய்யாமல் க்ருபாராமை சுட்டுக் கொன்றுள்ளனர். இதனால் ஒரிசாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாவோயிஸ்டுகளுக்கு யாரையாவது கடத்திச் செல்வதே வழக்கமாகிவிட்டது. முதலில் ஒரிசாவுக்கு சுற்றுலா வந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த இருவரை கடத்தினர். முதலில் ஒருவரையும், அடுத்தாக மற்றொருவரையும் விடுவித்தனர். இதற்கிடையே பிஜு ஜனதாதள எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை கடத்திச் சென்று அரசுடன் பேரம் பேசினர்.
பின்னர் ஹிகாகா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதுடன், கட்சியில் இருந்தும் விலகுவதாக வாக்குறுதியளித்ததையடுத்து அவரை சுமார் 1 மாதத்திற்குப் பிறகு கடந்த 26ம் தேதி விடுவித்தனர். ஆனால் இன்று காலை கடத்தப்பட்ட துணை சப்-இன்ஸ்பெக்டர் கடத்தப்பட்ட அன்றே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.