கேரள அமைச்சர் மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- நெடுமாறன்
சென்னை: கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட தங்களுக்கு ஆதரவாகச் செயல்படவில்லை என்பதற்காக முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸை கடுமையாக விமர்சித்துள்ளார் கேரள நீர்ப்பாசன்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப். எனவே அவர் மீது உச்சநீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப்பெரியாறு அணை வலிமையாக இருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர்நிலைக் குழு அணையின் நீர்மட்டத்தை அதிகபட்சம் 152 அடி வரை உயர்த்தினாலும் அணை மிகுந்த பாதுகாப்பாகவே இருக்கும்.
1979-ம் ஆண்டுக்கு முந்திய நிலையில் அணையில் நீரைத் தேக்கலாம் என திட்டவட்டமாகவும் தெளிவாகவும் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளைக் கொண்ட குழு அளித்த அறிக்கையைக் கண்டித்து கேரள நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தரம் தாழ்ந்தவையாகும்.
குறிப்பாக நீதிபதி தாமஸ் கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தங்களுக்கு ஆதரவாகச் செயல்படவில்லை என்று கூறியிருப்பதற்கு உச்சநீதிமன்றம் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.
பெண்ணிடம் சில்மிஷம் செய்து சிக்கியவர்
நீதிபதி கே.டி.தாமஸை கடுமையாக விமர்சித்துள்ள அமைச்சர் பி.ஜே.ஜோசப், கேரள டிவி செய்தி வாசிக்கும் பெண் ஒருவரிடம், ஓடும் வி்மானத்தில் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக சர்ச்சையில் சிக்கியவர் என்பது நினைவிருக்கலாம்.