ஹெலிகாப்டர் விபத்து- உயிர் தப்பினார் ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜூன் முண்டா
சரகேலா என்ற இடத்திலிருந்து தலைநகர் ராஞ்சிக்கு ஹெலிகாப்டரில் அர்ஜூன்முண்டா, அவரது மனைவி மீரா ஆகியோர் பயணம் மேற்கொண்டனர். ராஞ்சி விமான நிலையத்தில் நண்பகல் 12.15 மணியளவில் ஹெலிகாப்டர் தரை இறங்க முயன்றபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்தபோது தீப்பிடிக்கவில்லை.
இதையடுத்து ஹெலிகாப்டரில் படுகாயமடைந்த நிலையில் இருந்த அர்ஜூன் முண்டா, அவரது மனைவி மீரா மற்றும் விமானி ஆகியோர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஜார்க்கண்ட் முதல்வரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து தற்காலிகமாக உள்நாட்டு விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மேலும் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணைக்கு விமானப் போக்குவரத்து முகாமை உத்தரவிட்டுள்ளது.