பாடம் படிக்க முடியலை.. 'ஆல்அவுட்' சாப்பிட்டு அண்ணா பல்கலை. மாணவர் தற்கொலை முயற்சி!
சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் படித்த என்ஜினீயரிங் மாணவர்கள் மணிகண்டனும், சங்கீதாவும் ஏற்கனவே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். பாடம் படிக்க முடியாததால் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்போவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு மாணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் பெயர் சரவணன். ராஜபாளையத்தைச் சேர்ந்த சரவணன், 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த திங்கள்கிழமை இரவு விடுதி அறையில் மயங்கிய நிலையில் சரவணன் கிடப்பதைப் பார்த்த சக மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கொசுவை ஒழிக்கப்பயன்படும் ஆல் அவுட் மருந்தை சாப்பிட்டு அவர் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். தீவிர சிகிச்சைக்குப்பிறகு சரவணன் உயிர் பிழைத்துக் கொண்டார். இது பற்றி விசாரணை நடத்திய போலீஸாரிடம் பாடம் முடிக்க முடியாத நிலையிலேயே தற்கொலைக்கு முயன்றதாக அவர் கூறியுள்ளார். இனிமேல் தற்கொலைக்கு முயற்சிக்க மாட்டேன் என்றும் போலீசிடம் அவர் உறுதிமொழி அளித்திருக்கிறார்.
மாணவர்களின் தொடர் தற்கொலை சம்பவங்களால் அண்ணா பல்கலைக் கழகம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.