தமிழகத்தில் 1.96 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு!
எய்ட்ஸ் நோய் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சுற்றி வருகிறது. இந்த ரயில் கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் இருந்து புறப்பட்டு பல்வேறு மாநிலங்கள் வழியாகச் சென்று திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று கன்னியாகுமரி வந்தது.
ரெட் ரிப்பன் ரயில் கண்காட்சி தொடக்க விழா நேற்று கன்னியாகுமரி ரயி்ல் நிலையத்தில் நடந்தது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் முனைவர் டாக்டர் மோகன்தாஸ் கண்காட்சி ரயில் பற்றி விளக்கம அளித்தார்.
பின்னர் மோகன்தாஸ் கூறியதாவது,
தமிழ்நாட்டில் முதன்முறையாக 1986ம் ஆண்டு எய்ட்ஸ் பரவியிருப்பது சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் 24 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30 சதவீதம் பேர் பெண்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 1.96 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 96,000 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். சுமார் 62,000 பேருக்கு நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது எய்ட்ஸ் நோய் தாக்கம் சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் 42 எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர 782 சிறிய மையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்த ரயில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.