விவசாயி மகளிடம் ஆபாசப் பேச்சு... மனம் வெறுத்து தற்கொலை!
விருதாச்சலம்: விருதாச்சலம் அருகே தன்னிடம் தொலைபேசியில் வாலிபர் ஒருவர் அடிக்கடி தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்ததால் மனம் வெறுத்துதப் போன 17 வயது சிறுமி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சின்ன ஆத்துக்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா. இவரது தந்தை விவசாயி ஆவார். ஈரோட்டில் தங்கி அங்குள்ள கார்மெண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் மீனா.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீனாவின் செல்போனில் ஒரு நபர் தொடர்பு கொண்டார். தனது பெயர் மணி என்று கூறிக் கொண்ட அவர், மீனாவை வர்ணித்து ஆபாசமாகப் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியான மீனா இணைப்பைத் துண்டித்தார். அப்படியும் விடாத அந்த நபர் தொடர்ந்து செல்போனில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து தனது தந்தைக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ராமானுஜம் ஈரோடு விரைந்தார். தனது மகளை ஊருக்கு அழைத்து வந்து விட்டார்.
அப்படியும் விடாத அந்த வாலிபர் தொடர்ந்து தொல்லை கொடுக்கவே மீனாவின் தந்தை போலீஸில் புகார் கொடுத்தார். அவர் புகார் கொடுப்பதற்காக வீட்டை விட்டுப் போனபோது மனம் வெறுத்துப் போன நிலையில் வீட்டிலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டார் மீனா.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.