கருணாநிதியின் மகள் செல்வியின் உதவியாளர் ரூ. 2 கோடி கேட்டு மிரட்டுவதாக மார்ட்டின் மனைவி புகார்!
கடந்த திமுக ஆட்சியில் ஆட்சிக்கு மிக நெருக்கமாக இருந்தார் மார்ட்டின். இந் நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர் மீது அடுக்கடுக்காய் வழக்குகள் பாய்ந்தன. குண்டர் சட்டமும் பாய்ச்சப்பட்டது.
இதையடுத்து மார்ட்டினை விடுவிக்க தன்னிடம் அதிமுகவினரும் போலீசாரும் கோடிக்கணக்கில் பேரம் பேசுவதாகவும், இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுள்ளதாகவும் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் பரபரப்பு குற்றம் சாட்டினார்.
இடையில் என்ன நடந்ததோ, மார்ட்டினின் ஜாமீனின் மனுவுக்கு போலீஸ் தரப்பில் அதிக எதிர்ப்புக் காட்டப்படாததால், அவர் ஜாமீன் பெற்று 3 நாட்களுக்கு முன் வெளியே வந்தார்.
இந் நிலையில் பெங்களூரில் வசிக்கும் கருணாநிதியின் மகள் செல்வியின் ஆட்கள் தங்களை மிரட்டி ரூ. 2 கோடி கேட்டு வருவதாக கோவை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் உளவுப் பிரிவு துணை கமிஷ்னர் சுரேஷ் குமாரிடம், நேற்று மாலை லீமா ரோஸ் புகார் கொடுத்துள்ளார். அவருடன் அவரது மகள் டெய்சி, மகன் சார்லஸ் ஆகியோரும் உடன் வந்தனர்.
போலீசில் தந்துள்ள புகாரில், மார்ட்டின் கடந்த 7ம் தேதி ஜாமீனில் வெளியே வந்ததில் இருந்து செல்வியிடம் முன்பு உதவியாளராக இருந்த செல்வம் என்ற 'ஹவாலா' செல்வமும், கோவையைச் சேர்ந்த லாட்டரி ஏஜென்ட் ஆனந்த வடிவேலும் எங்களை மிரட்ட ஆரம்பித்துள்ளனர். எங்களுக்கு ரூ. 2 கோடி தராவிட்டால் மார்ட்டினை பொய்யான லாட்டரி வழக்கில் சிக்க வைப்போம் என்று தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டுகிறார்கள்.
சென்னை, திருச்சி விமான நிலையங்கள் மூலம் போலி லாட்டரி டிக்கெட்டுகளை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்து மார்ட்டினின் பெயரால் திருட்டுத்தனமான வினியோகம் செய்வோம் என்று மிரட்டுகின்றனர்.
இதில் ஆனந்த வடிவேல் ஏற்கனவே மார்ட்டினுக்கு எதிராக தொழில்ரீதியில் செயல்பட்டவர். அவர் மீது கேரளாவில் போலி லாட்டரி வழக்கு உள்ளது.
கிட்டத்தட்ட 8 மாத சிறைவாசத்துக்குப் பிறகு இப்போது தான் மார்ட்டின் வெளியே வந்துள்ளார். இந் நிலையில் இந்த மிரட்டலால் குடும்பமே நிலைகுலைந்து போயுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மனுவை வாங்கிக் கொண்ட உதவி கமிஷ்னர் நாளை (இன்று) வந்து கமிஷ்னரை சந்திக்குமாறு கூறி அனுப்பியுள்ளார்.
திமுக ஆட்சியில் கருணாநிதிக்காக சில திரைப்படங்களை மார்ட்டின் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்ததால் தான் அவர் உள்ளே தள்ளப்பட்டதாகவும் பேசப்பட்டது.
தமிழக போலீசார் விட்டுக் கொடுத்ததால், மார்ட்டின் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், கருணாநிதிக்கு எதிராக மார்ட்டின் குடும்பம் புகார் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.