ஜெயேந்திரர் மீது ரஞ்சிதா அவதூறு வழக்கு!
நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக அறிவித்ததிலிருந்து ஆன்மீக உலகில் பெரும் புயல் அடித்து வருகிறது.
நித்யானந்தா நியமனத்தை பெரும்பான்மையான ஆதீனங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதேநேரம், நித்யானந்தா நியமனத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியாகிவிட்டன.
இந்த நிலையில், நித்யானந்தா நியமனம் குறித்து நேற்று கருத்து தெரிவித்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், "எப்போதும் ரஞ்சிதா என்ற பெண்ணுடன் சுற்றிக் கொண்டிருக்கும் நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக அறிவித்தது தவறு. இதனை ஏற்பதற்கில்லை," என்று கண்டித்திருந்தார்.
உடனே இதற்கு ரியாக்ட் செய்த நித்யானந்தா, ரஞ்சிதா என்னுடன் இல்லை. 10 நாள்களுக்குள் ஜெயேந்திரர் தன் பேச்சை வாபஸ் பெற வேண்டும் என கெடு விதித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, ஜெயேந்திரர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகை ரஞ்சிதா.
இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்துக்கு தன் வழக்கறிஞர்களுடன் வந்த ரஞ்சிதா, காஞ்சி ஜெயேந்திரர் தன் மீது அவதூறு கிளப்பியதாக புகார் தெரிவித்து அவர் மீது அவதூறு வழக்கும் பதிவு செய்தார்.