களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு தேசிய விருது
திருநெல்வேலி: காடுகளைப் பாதுகாப்பதில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விருது கிடைத்துள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பாக முதன்மை வனப்பாதுகாவலர் சஞ்சய்குமார் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் 985 சதுர கிமீ உள்ளடக்கியது. இதில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. காடுகளை பாதுகாப்பதற்காக 228 கிராம வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புலிகளைக் காப்பகத்தில் மக்களுடன் கூடிய வனப்பாதுகாப்புத் திட்டமான சூழல் மேம்பாட்டு திட்டம் கடந்த 1995ம் ஆண்டு உலக வங்கி மூலம் தொடங்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளில் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுடன் ஒருங்கிணைந்து காடுகள் பாதுகாப்பில் முக்கிய பணியாற்றியதற்காக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு தேசிய புலிகள் ஆணையத்தின் சிறந்த விருது கிடைத்துள்ளது
இந்தியாவில் 40 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் 11 புலிகள் காப்பகத்திற்கு ஒவ்வொரு வகையில் சிறந்த விருது கிடைத்துள்ளது. இந்த விருதுகள் புலிகள் காப்பக வல்லுனர்கள் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.