தலாய்லாமாவுக்கு விஷம் கொடுத்து கொல்ல சீனா முயற்சிப்பதாக புகார்
தர்மசாலா: திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமாவை விஷம் கொடுத்து கொலை செய்ய திபெத்திய பெண் ஒருவருக்கு சீனா பயிற்சி கொடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு கடந்த திபெத்திய அரசின் தலைமையகமான தர்மசாலாவும் தலாய்லாமாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உறுதி செய்துள்ளன.
தலாய்லாமாவுக்கு கொலை மிரட்டல்கள் வந்தது உண்மை என்று அவரது செயலாளர் சிம்மி சொய்க்யாப்பா கூறியுள்ளார். இது குறித்து இங்கிலாந்து ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், தலாய்லாமா ஆசீர்வாதம் கொடுக்கும் போது அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய சீன அரசாங்கம் திபெத்திய பெண்ணையே தயார் செய்திருக்கிறது என்று பகிரங்கமாகத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இந்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் இமயமலை அடிவாரத்தில் உள்ள தலாய்லாமாவின் தர்மசாலாவை சுற்றி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தலாய்லாமா, எங்களுக்கு திபெத்திலிருந்து சில தகவல்கள் கிடைத்தன. திபெத்தியர்கள் சிலரை குறிப்பாக பெண்களை விஷம் கொடுத்து என்னை கொலை செய்வதற்காக பயிற்சிக்கு தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.. அதாவது தலையில்.. உடையில் விஷம் தேய்த்து நான் அவர்கள் தலையைத் தொட்டு ஆசீர்வதிக்கும் போது அந்த விஷத்தை எனது உடலில் செலுத்த முயற்சித்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இத்தகைய முயற்சிகளை சீனா கைவிட்டுவிட்டு திபெத் தொடர்பாக ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் தலாய்லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.