மகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை- சிரஞ்சீவி
நடிகர் சிரஞ்சீவியின் மூத்த மகள் சுஷ்மிதா. இவர் கணவர் விஷ்ணு பிரசாத்துடன் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று விஷ்ணு பிரசாத், அவரது தந்தை தொழில் அதிபர் சிவபிரசாத் வீடுகள், அலுவலகங்களில் சோதனையிட்டனர்.
நுங்கம்பாக்கம், தியாகராயநகர், தேனாம்பேட்டை, மைலாப்பூர் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் ரூ 35 கோடி சிக்கியது.
இதற்கிடையே இந்தப் பணம் சிரஞ்சீவியுடையது என்றும் சிரஞ்சீவி வீட்டிலும் சோதனை நடந்ததாக ஆந்திராவில் தொலைக்காட்சிகள் செய்தி ஒளிபரப்பியது. இதற்கு நடிகர் சிரஞ்சீவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், "எனது சம்பந்தியின் சம்பந்தி நந்தகோபால் ரியல் எஸ்டேட், பாமாயில் ஆலை, கிரானைட் தொழில் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவரது வீட்டில் நடந்த சோதனையின் தொடர்ச்சியாக சென்னையில் வசிக்கும் எனது மற்றொரு சம்பந்தி சிவபிரசாத் வீட்டிலும், மருமகன் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி வேலை இது
தொழில் அதிபர் வீடுகளில் வருமான வரி சோதனை நடப்பது சாதாரண விஷயம். இதற்கும் எனது குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என் மருமகன் வீட்டில் கைப்பற்றிய பணத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
இதில் என்னை தொடர்புபடுத்தி ஜெகன்மோகன் ரெட்டி மக்களை திசை திருப்ப முயல்கிறார். என்னை களங்கப்படுத்தி அவரது டி.வி.யில் செய்திகள் ஒளிபரப்பப்பட்டது. அவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்.
நான் எனது மகன் திருமண வேலையில் மும்முரமாக இருக்கிறேன். சென்னையில் இருந்த எனது மகள் சுஷ்மிதா கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் வந்து என் வீட்டில்தான் தங்கியுள்ளார்," என்றார்.