"சிரஞ்சீவி வீட்டில் ஐ.டி. ரெய்டு" செய்தியால் அதிர்ந்து போய் சரண்டரான எதியூரப்பா
பாரதிய ஜனதாவில் விருந்து விலகுவதா? தனிக்கட்சி தொடங்குவதா? அமைச்சர்கள் ராஜினாமா தொடர்பில் அடுத்த நடவடிக்கை என்ன? என்பது பற்றியெல்லாம் மாலையி அறிவிக்கப் போகிறேன் என்று தும்கூரில் நேற்று திராணி காட்டி பேசினார் எதியூரப்பா.
எதியூரப்பாவும் அவரது ஆதரவாளர்களும் ஒன்று கூடி ஆலோசனை செய்து கொண்டிருந்த நேரத்தில் சிரஞ்சீவி வீட்டில் ரெய்டு நடப்பதாக சில தொலைக்காட்சிகள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் உண்மையில் நடந்தது சென்னையில் உள்ள அவரது மகள் வீட்டில்தான் ரெய்டு நடந்தது. நேற்றைய ரெய்டுக்கும் சிரஞ்சீவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது பின்னர்தான் தெரிய வந்தது.
சிரஞ்சீவி வீட்டில் ரெய்டு என்ற செய்தியால் எதியூரப்பா முகாம் ஒரு கணம் அதிர்ந்து போனது. சுரங்க முறைகேட்டில் ஏற்கெனவே சிபிஐ விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் எதியூரப்பாவோ ரொம்பவே அதிர்ந்து போனாராம். அவரது ஆதரவாளர்கள் கோஷ்டியோ, ஆந்திராவில் காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரமே சிரஞ்சீவிதான்.. அதுவும் ஜெகனுக்கு எதிரான வலுவான மனிதர். அவருக்கே இந்த நிலைமையா? என்ற ரேஞ்சில் ஒத்து ஊதியிருக்கின்றனர்.
ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியோ எதியூரப்பாவை சேர்த்துக் கொள்ளும் மூடில் இருக்கவும் இல்லை. சோனியா காந்தியை புகழ்ந்து எதியூரப்பா பேசினாலும் அவரோட சர்ட்டிபிகேட் எங்களுக்குத் தேவையில்லை என்று நிராகரித்திருந்தது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சித்தராமையாவும் ஒருபோதும் எதியூரப்பாவை சேர்க்கவே மாட்டோம் என்று கூறியிருந்தார்.
இப்படி காங்கிரஸ் கட்சிக்குப் போகனும்னு நினைச்சாலும் போக முடியலை.. பாஜகவில் முதல்வர் பதவி கேட்டாலும் கிடைக்கலை.. இதுல கட்சியை விட்டு போய் தனிக்கட்சி தொடங்கலாம்னு நினைச்சா.. சிரஞ்சீவி வீட்டிலேயெ ரெய்டா? என்று கோஷ்டி கானம் காதைப் பிளக்க வேறு வழியே சரண்டர் ஆகிவிட்டாராம் எதியூரப்பா. இதைத் தொடர்ந்துதான் எதுக்கு வம்பு என அருண் ஜேட்லியை சந்திக்க எதியூரப்பா ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
எதியூரப்பாவை சமாதானப்படுத்த எத்தனையோ வழிகளை பாஜக மேலிடம் முயற்சித்துப் பார்த்தது.. ஆனால் ஒரு தவறான செய்தி அந்த பிரளயத்தையே பம்மவும் வைத்திருக்கிறதே...