இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி பொன்சேகா இந்த வாரம் விடுவிக்கப்படுகிறாரா?
இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போருக்கு தலைமை தாங்கிய சரத் பொன்சேகா, போரில் புலிகள் முடக்கப்பட்ட பி்ன், அதிபர் ராஜபக்சேவால் ஒதுக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது ஆயுத ஊழல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை விசாரித்த பல்வேறு நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளின்படி அவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைத்தது. இந்நிலையில் வரும் 18ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹில்லாரி கிளிண்டனை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் அமெரிக்காவில் வைத்து சந்தித்து பேசவிருக்கிறார்.
இந்த சந்திப்புக்கு முன்பாக சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. அவரை இந்த வாரமே அரசு விடுதலை செய்யலாம் என்று அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.