ஜெயலலிதாவை சந்தித்தார் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டர் நெல்லையைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேனன் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். அப்போது சென்னையில் வசிக்கும் அவரது பெற்றோரை தமிழக அரசியல் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். கலெக்டரை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தினார்.
சத்தீஸ்கர் அரசு மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலெக்டர் கடந்த 3ம் தேதி விடுவிக்கப்பட்டார். 12 நாட்கள் மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்தாலும் அவர்கள் தன்னை துன்புறுத்தவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். விடுதலையான உடன் அவரை சுக்மா மாவட்ட கலெக்டர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சென்னை வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் இன்று தலைமைச் செயலகத்திற்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அப்போது தனது விடுதலைக்காக மத்திய அரசை வலியுறுத்தியதற்காக முதல்வருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேனன் கடத்தப்பட்டிருந்தபோது, ஜெயலலிதாவை சந்திக்க அவரது தந்தை முயன்றார். ஆனால், அவருக்கு அப்பாயின்மெண்ட் தரப்படவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியது நினைவுகூறத்தக்கது.