வீரபாண்டி ஆறுமுகத்தின் சேலம், சென்னை, தர்மபுரி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்ட்!
முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டிற்கு இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்தனர். அவர்கள் அங்கு அதிகாலை முதல் பகல் 11.30 மணி வரை அதிரடி சோதனை நடத்தினர். சேலம், சென்னை, தர்மபுரி உள்ளிட்ட 16 இடங்களில் சோதனை நடந்தது. மேலும் வீரபாண்டி ஆறுமுகம் மகன் மற்றும் உதவியாளர் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சேலம் அருகே பூலாவரியில் உள்ள வீடு, தொழிற்சாலைகளில் போலீசார் சோதனை நடத்தினர். வீரபாண்டி ஆறுமுகம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்ததையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சோதனை முடிந்த பிறகு வீரபாண்டி ஆறுமுகம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்த சோதனைகள் எல்லாம் எதிர்பார்த்தவையே. அதிமுக அரசு தொடர்ந்து திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசார் எனது வீட்டில் சோதனை நடத்தினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் குவிக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் கடமையை செய்தனர். நான் எதிலும் தலையிடாமல் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். போலீசார் எனது வீட்டில் சோதனையின்போது பார்த்தவற்றை பதிவு செய்து அதன் நகலை என்னிடம் கொடுத்தனர். இந்த சோதனையை நான் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்றார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்தீர்களா என்று கேட்டதற்கு அவர் கூறுகையில்,
நான் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்தேன். அவர்கள் கேட்ட சந்தேகங்கள் அனைத்திற்கும் விளக்கமாக பதில் அளித்தேன். கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தேன். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதில் இருந்து விடுதலையானேன்.
இதேபோன்று 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை மீண்டும் அமைச்சராக இருந்தேன். அந்த காலகட்டத்தில் சொத்துக்கள் வாங்கப்பட்டதா என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
அதிமுக அரசு முதலில் நில மோசடி வழக்கி்ல் முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தது. தற்போது லஞ்ச ஒழி்ப்பு போலீசார் சோதனை நடத்துகிறார்கள் என்றார்.