அங்கோலாவில் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் ஆயிரம் இந்தியர்கள்: தூதருக்கு எஸ்.எம்.கிருஷ்ணா சம்மன்
டெல்லி: அங்கோலா நாட்டின் சிமெண்ட் தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளரால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டின் இந்தியத் தூதர் மேனுவல் ஈடுடர்டோவிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.
அங்கோலா நாட்டின் சும்பே நகரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் நூற்றுக்கணக்கானோர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தோர். கடந்த சில மாதங்களாக சிமெண்ட் தொழிற்சாலை நிர்வாகம் ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இதை எதிர்த்து இந்தியத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியோர் மீது தாக்குதல் நடத்திய சிமெண்ட் தொழிற்சாலை நிர்வாகம், அனைவரையும் சட்டவிரோதமாக சிறைவைத்திருக்கிறது. அனைவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்து வைத்திருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணாவுக்கு ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி கடிதமும் அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக வயலார் ரவி நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் அந்நாட்டின் இந்திய தூதருக்கு கிருஷ்ணா சம்மன் அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு வந்த அங்கோலா தூதரிடம் இந்தியத் தொழிலாளர் விவகாரத்தை சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணா வலியுறுத்தினார்.