பொன்சேகாவை விடுதலை செய்ய ராஜபக்சேவுக்கு இலங்கை அமைச்சரவை அனுமதி
கொழும்பு: சிறையில் உள்ள இலங்கை ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய மகிந்த ராஜபக்சேவுக்கு அந்நாட்டு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் பந்துல ஜெயசேகர, பொன்சேகாவை விடுவிக்க அமைச்சரவை ஒப்ப்யுதல் அளித்துள்ளது என்று மட்டும் கூறினார்.
பொன்சேகாவின் மனைவி அனோமா கூறியதைப் போல நிபந்தனையற்ற விடுதலையா என்ற கேள்விக்கு ஜெயசேகர பதிலளிக்க மறுத்துவிட்டார்.
திடீர் சந்திப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் தலைமை தளபதியாக இருந்தவர் பொன்சேகா. போர் முடிவுற்ற நிலையில் யாரால் வெற்றி என்ற ஈகோ போட்டியில் பொன்சேகாவுக்கும் ராஜபக்சேவுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு கடைசியில் பொன்சேகா சிறைக்குப் போக வேண்டிவந்தது.
இந்நிலையில் பொன்சேகா குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தால் கருணை அடிப்படையில் பரிசீலிப்போம் என்றெல்லாம் ராஜபக்சே கூறிவந்தார். ஆனால் கடந்த ஒருவார காலமாக பொன்சேகா மனைவி அனோமா தமது மாளிகைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்துமாறு ராஜபக்சே கூப்பிட்டுப் பார்த்தார். அவர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு திடீரென பொன்சேகா கட்சி எம்.பி. திரன் அலஸ் இல்லத்துக்குப் போன ராஜபக்சே அங்கு பொன்சேகா மனைவி அனோமாவுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியது கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சந்திப்புக்குப் பினன்ர் செய்தியாளர்களிடம் பேசிய அனோமா, பொன்சேகாவை விடுதலை செய்ய அரசு ஒப்புக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
இதனையடுத்து நேற்று கூடிய இலங்கை அமைச்சரவை பொன்சேகாவை விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும் அமெரிக்காவின் நெருக்கடியால்தான் பொன்சேகாவை விடுவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இலங்கை அரசு இதனை நிராகரித்துள்ளது.